பிளஸ் 2 தேர்வில் 1063 மதிப்பெண் எடுத்த மாணவி சிந்துஜாவுக்கு டாக்டராகும் கனவு தகர்ந்து போனதாக மனவேதனை அடைந்து தூக்குக் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக நிகழ்வு நெல்லை மாவட்டம் தென்காசி அருகே நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம், தென்காசி அடுத்த மேலகரத்தை சேர்ந்தவர் சிந்துஜா. இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மாண்டிசோரியில் பள்ளி பிளஸ் 2 படித்து வந்தார். அவரது தந்தை சுப்பிரமணியன் தனியார் பேருந்தில் நடத்துனராக உள்ளார். தாயார் செங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சகோதரர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.
பெற்றோருக்கு சிந்துஜாவையும், அவரது சகோதரரையும் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், சிந்துஜா அண்ணன் பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்களே எடுத்ததால் டாக்டராகும் கனவு தகர்ந்து போனது.
இதனால், மகள் சிந்துஜாவை எப்படியும் டாக்டராக்க வேண்டும் என ஆசைப்பட்ட பெற்றோர், அதனைச் சொல்லி சொல்லியே வளர்த்ததாக தெரிகிறது. இந்த ஆசையை நிறைவேற்ற சிந்துஜாவும் கடும் முயற்சி எடுத்து படித்துள்ளார்.
இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை வெளியானது. இதில், சிந்துஜா 1063 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை சிந்துஜா படித்த பள்ளி மாணவிகளே பிடித்துள்ளனர்.
இதனால் டாக்டராகும் தன்னுடைய மற்றும் பெற்ரோரின் கனவு தகர்ந்து போனதாக மனவேதனை அடைந்த சிந்துஜா, வீட்டில் தூக்குப் போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
நல்ல மதிப்பெண் பெற்ற நிலையில் சிந்துஜா, தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சக மாணவிகள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.